Advertisement
Categories: Service

அரசு தரும் மானியத்துடன் தொழில் தொடங்கி நீங்கள் ஜெயிக்கத் தயாரா? இதோ உங்களுக்கான திட்டங்கள்…

இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும், இந்த மையத்தில் பொது மேலாளர் ஒருவரும் இருப்பார். இவர் மூலம் தொழிலுக்கான கடனை மானியத்துடன் பெறலாம்.

இன்றைய தேதியில் ஒவ்வோர் ஆண்டும் இந்தியா முழுக்க 50 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பது சிக்கலான விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி ஜெயிக்கத் தேவையான உதவிகளைச் செய்ய மத்திய, மாநில அரசாங்கங்கள் தயாராக உள்ளன.

வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்!
இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும், இந்த மையத்தில் பொது மேலாளர் ஒருவரும் இருப்பார். இவர் மூலம் தொழிலுக்கான கடனை மானியத்துடன் பெறலாம்.

அரசின் மானியத்துடன் தொழில் கடன் பெறுவதற்கு செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பெரம்பலூரில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர் அ.செந்தில்குமார்…

“மாவட்டத் தொழில் மையமானது சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள மக்களுக்குத் தொழில் சம்பந்தமான சந்தேகங்கள், ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவற்றை வழங்கி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய உதவுவதுடன், துறை சார்ந்த வங்கிகளின் மூலம் எளிமையான முறையில் கடன் பெற்றுத் தருவதற்கும் வழிவகை செய்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காகவும் புதிய தொழில்முனைவோருக்கு உதவும் வகையிலும் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொழில் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர் இதற்காக அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் அணுகி ஆலோசனை பெறலாம். தொழில்முனைவோர் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் தொழில் மையத்தின் உதவியுடன் வங்கிகள் மூலம் தொழில் கடனானது வழங்கப்படும்.

தொழில் கடன் தருவதற்கான வங்கிகளின் வரம்பானது, விண்ணப்பிக்கும் நபரது வங்கிக்கணக்கின் சிபில் ஸ்கோரைப் பொறுத்து மாறுபடும். விண்ணப்பிக்கும் நபர் தொழில் கடன் வாங்கும் தகுதி உடையவர் என உறுதி செய்யப்பட்டபின், வங்கி மேலாளர் தொழில் தொடங்குவதற்கான இடம், தக்க சான்றுகளை ஆய்வு செய்தபின்னரே அவருக்குக் கடன் வழங்கப்படும். இவற்றில் அரசின் தொழில் கடனுக்கான மானியத் தொகை விண்ணப்பிக்கும் நபரது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

உதாரணமாக, ரூ.10 லட்சம் மதிப்புக்கு ஒரு இ-சேவை மையம் ஒரு நபரால் தொடங்கப்படும்போது ரூ.3.5 லட்சம் மானியத் தொகையைக் கடன் பெறுபவரின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திவிடும். தொழில் தொடங்குவதற்கு அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.

மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் தொழில் கடன் பெற பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. திட்டங்களைப் பொறுத்து கடனுக்கான வரம்புகளும் மாறுபடும் என்பதைக் கடன் பெறுபவர்கள் மறக்கக் கூடாது.

மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி இனி பார்ப்போம்…

படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Unemployed Youth Employment Generation Programme – UYEGP)

இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதி அன்று 18 வயது முடிவடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச 35 வயதுக்கு உட்பட்டவர் ஆகவும், சிறப்புப் பிரிவினரான அதாவது மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களுக்கு அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமலும், கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் அவர் விண்ணப் பிக்கும் பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருபவராக இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் மூலம் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சமும், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் வசதி பெற வாய்ப்புள்ளது.

அரசின் மூலம் கிடைக்கும் மானியம் ஆனது திட்ட மதிப்பீட்டில் 25% என்றாலும், இதற்கான உச்சவரம்பு ரூ2.50 லட்சம்.

இந்தத் திட்டத்தின் விண்ணப்பத்தில் இரண்டு நகல்களாக இணைக்கப்பட வேண்டியவை… பள்ளி/கல்லூரி மாற்றுச்சான்று, குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை இல்லாதவர்கள் தாசில்தாரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், விலைப்பட்டியல் கொட்டேஷன் அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் தர வேண்டும்!

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (New Entrepreneur cum Enterprise Development Scheme – NEEDS)

இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 21-ஆகவும் அதிகபட்ச 35-ஆகவும், சிறப்புப் பிரிவினருக்கு அதிகபட்சம் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று வருடம் தமிழ்நாட்டில் வசிப்பவராகவும், கல்வித் தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவராகவும் இருக்க வேண்டும்.

உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீடு வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்முனைவோரின் பங்குத் தொகையானது, பொதுப் பிரிவினருக்கு மொத்த திட்ட முதலீட்டில் 10 சதவிகிதமும், சிறப்புப் பிரிவினருக்கு மொத்த திட்ட முதலீட்டில் 5 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசின் மானியம் ஆனது திட்ட முதலீட்டில் 25% (உச்சவரம்பு ரூ.75 லட்சம்) பெறலாம். மேலும், 3% வட்டி மானியம் கடன் செலுத்தும் காலம் வரை பெறலாம். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் அனைத்து வணிக வங்கிகளின் மூலம் இதற்கான முதலீட்டுத் தொகை வழங்கப்படும்.

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Prime Minister’s Employment Generation Programme – PMEGP)

இந்தத் திட்டத்தின் விண்ணப்ப மனுவை www.kviconline.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடாக உற்பத்திப் பிரிவுக்கு ரூ.50 லட்சமும், சேவைப் பிரிவுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படுகிறது. உற்பத்திப் பிரிவு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருந்தாலும், சேவைப் பிரிவில் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தாலும் குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாகும்.

திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்துக்குக் குறைவாகவோ, சேவைப் பிரிவில் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாகவோ இருந்தால் கல்வித் தகுதி தேவையில்லை. தேவைப்படும் நகல்களாகத் திட்ட அறிக்கை, ஜி.எஸ்.டி எண்ணுடன்கூடிய இயந்திரம் மற்றும் தளவாடங்களுக்கான உத்தேச மதிப்பீடு, கட்டடம் கட்டுவதாக இருந்தால் கட்டட எஸ்டிமேட் ப்ளு பிரிண்ட், நிலப்பத்திர நகல்/குத்தகை பத்திரம்/ வாடகை ஒப்பந்தப் பத்திரம், படிப்பு சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் இரண்டு தேவை.

வங்கிக் கடன் தொகையாகத் திட்ட மதிப்பீட்டில் 90% – 95% தொகையை வங்கி அனுமதி செய்து வழங்கும்.

மேற்கண்ட திட்டத்தில் சொந்த முதலீடாக பொதுப் பிரிவில் உள்ள பயனாளிகள் 10 சதவிகிதமும், நலிவடைந்த பிரிவில் உள்ள பயனாளிகள் 5 சதவிகிதமும் செலுத்த வேண்டும்.

திட்ட முதலீட்டில் கிராமப்புற பொதுப் பிரிவினருக்கு 25% மானியமும், கிராமப்புற சிறப்பு பிரிவினருக்கு 35% மானியமும், நகர்ப்புறப் பொதுப் பிரிவினருக்கு 15% மானியமும், நகர்ப்புற சிறப்பு பிரிவினருக்கு 25% மானியமும் வழங்கப்படும்.

பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises Scheme – PMFME)

இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முடிந்தவர்களாக இருக்க வேண்டும். வருமானம் மற்றும் கல்வித் தகுதிக்கு நிர்ணயமும் எந்தப் பாகுபாடும் இந்தத் திட்டத்துக்கு இல்லை.

இந்தத் திட்டத்தின் மூலம் 35% மூலதன மானியம் (ரூ.30 லட்சம் வரை மூலதனக் கடனுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்) விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும். ஏற்கெனவே அரசுத் திட்ட கடன் பெற்றவரும், விரிவாக்கத்துக்குத் தொழில் கடன் வாங்கி பயன் பெறலாம். நகல் ஆவணங்களாக ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கிப் புத்தகம், கல்விச் சான்று, இயந்திரங்களுக்கான கொட்டேஷன், போட்டோ ஆகியன தேவைப்படும்.

சிறிய அரிசி ஆலை, மாவு மில், எண்ணெய் பிழியும் செக்கு, சிறுதானியம்/ முந்திரியில் மதிப்புக்கூட்டும் பொருள்கள் தயாரித்தல், பேக்கரி, சத்து மாவு / மசாலா, கால்நடைத் தீவனம், கோழித் தீவனம், இதர உணவுப் பொருள்கள் தயாரிக்கும் தொழில் ஆகியன இந்தத் திட்டத்தின் மூலம் பயனுறும் உதாரணத் தொழில்கள் ஆகும்.

அக்ரி சம்பந்தமான ஆப்களுக்கு நல்ல வாய்ப்பு! சுந்தர் பிச்சையை சந்தித்த கிருஷ்ணகிரி இளைஞர்!
எங்கு விண்ணப்பிப்பது?
www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தின்கீழ் UYEGP மற்றும் NEEDS, PMFME திட்டத்துக்கான விண்ணப்ப மனுவை பதிவிறக்கம் செய்யலாம். தேவையான ஆவணங்களுடன் மாவட்டத் தொழில் மையத்தில் சமர்ப்பித்து வங்கியின் மூலம் கடன் பெற்று தொழில்முனைவோர் ஆகலாம். இதன்மூலம், வேலைவாய்ப்பு நாடுபவராக இல்லாமல், வேலைவாய்ப்பு வழங்குபவராக மாற முடியும். தொழில்முனைவோர் தங்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன், நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும்

admin

Recent Posts

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 week ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

2 months ago