
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையினை பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 வருடங்களும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு 1 வருடமும் போதுமானது.
உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவி தொகை பெற தகுதியுள்ள விருப்பமுள்ள பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதள முகவரியான
website : https://www.tnvelaivaaippu.gov.in/
pdf :https://www.tnvelaivaaippu.gov.in/pdf/download_forms/ua_normal.pdf
pdf 2 : https://www.tnvelaivaaippu.gov.in/pdf/download_forms/ua_differentlyabled.pdf
என்ற இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம், (அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக) முத்திரையினை பெற்று படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை நவம்பர் 30-ந் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அளித்து வேலைவாய்ப்பற்றோருக்கான இளைஞர் உதவித்தொகையினை பெற்று பயன்பெறுங்கள்” இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அந்தந்த மாவட்டங்களில் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கும் மாதம் 200 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. பிளஸ் 2 அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் என்றால் 400 ரூபாயும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 600 ரூபாயும் மாதம் உதவி தொகை வழங்கப்படுகிறது. அதேநேரம் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம், விவசாயம் போன்ற தொழிற் பட்டப்படிபுகள் படித்தவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 72000க்கு மேல் இருக்ககூடாது. 40 வயது பூர்த்தி அடைந்திருக்ககூடாது. மேற்கண்ட தகுதி உடையவர்கள் விண்ணப்பத்தினை நவம்பர் 30-ந் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்
