தமிழகத்தில் உள்ள கோயில்களில் 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது, கோயில் பாதுகாப்புக்காக 10 ஆயிரம் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, முக்கிய கோயில்களான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், சமயபுரம்மாரியம்மன் கோயில், ஸ்ரீரங்கம்அரங்கநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்,மயிலை கபாலீஸ்வரர் கோயில் உட்பட 47 கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கோயில் வாரியாக தேவைப்படும் பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி நடந்து வருகிறது.
மேலும், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில், திருச்சிசிறுவாச்சூர் மதுரகாளியம்மன்கோயில், பைம்பொழில் திருமலைக்குமார சுவாமிகோயில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்,கடலூர் மாவட்டம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட 489 கோயில்கள் உட்பட அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிந்தவுடன், முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது
