
சென்னை: கடந்த மாதம் கணிசமாகக் குறைந்த தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. ஜூலை மாதம் முதல் இரு நாட்கள் மட்டும் மட்டும் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் சுமார் 150 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் கடைசி 10 நாட்கள் தங்கம் விலை கணிசமாகச் சரிந்தது. இதற்கு மத்தியக் கிழக்கில் அமைதி திரும்பியது பிரதானக் காரணம். 10 நாட்களில் தங்கம் விலை கணிசமாகவே குறைந்திருந்தது. குறைப்பாக ஜூன் 30ம் தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8915 வரை சென்றது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
ஆனால், ஜூலை 1ம் தேதி ஆரம்பித்தவுடன் மீண்டும் யூடர்ன் போட்ட தங்கம் விலை. கடந்த இரு நாட்களாக உயர்ந்தே வருகிறது. ஜூலை 1ம் தேதி ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்த நிலையில், நேற்று ஜூலை 2ம் தேதி ரூ.45 உயர்ந்திருந்தது. மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்துள்ளது பொதுமக்களிடையே கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்குத் தங்கம் விலை மீண்டும் உயருமோ என மக்கள் அஞ்சுகிறார்கள்.
ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், “டாலர் மதிப்பு சரிந்துள்ளது. இதன் காரணமாகவே தங்கம் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்கச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3300 டாலருக்கு கீழே போன தங்கம் இப்போது மீண்டும் 3335ஐ தாண்டிவிட்டது. நான் முன்பே சொன்னது போல 3200 டாலர் என்பது வலிமையான சப்ரோர்ட் சிஸ்டமாக இருக்கிறது” என்றார்.
இதுதான் லிமிட்
பொதுவாக எந்தவொரு பங்காக இருந்தாலும் சரி, அல்லது தங்கமாக இருந்தாலும் சரி, ஏறும்போது ஏறிக்கொண்டே இருக்காது. அதேபோல இறக்கும்போதும் இறங்கிக் கொண்டே இருக்காது. அப்படி ஏறும் போது, அது சட்டென கொஞ்சம் குறையும். ஆனால், குறிப்பிட்ட பாயிண்டிற்கு மேல் அது குறையாது. அதைத் தான் சப்போர்ட் என்பார்கள்.
தங்கத்திற்கு இப்போது 3200 டாலர் (இந்திய மதிப்பில் 8807.63 ரூபாய்) சப்போர்ட்டாக இருப்பதாக ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகிறார். அதாவது இதற்குக் கீழ் தங்கம் விலை போக வாய்ப்புகள் குறைவு என்பதே அவரது கருத்து! அமெரிக்காவில் 24 கேரட் மதிப்பிலேயே தங்கம் வர்த்தகமாகும். எனவே ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடும் 3200 டாலர் என்பது 24 கேரட்டிற்கானது. மேலும், இந்தியாவுக்கு வரும்போது அதில் இறக்குமதி வரியும் சேர்ந்துவிடுவதாலேயே தங்கம் விலை சர்வதேச சந்தையைக் காட்டிலும் இங்குச் சற்று அதிகமாக இருக்கிறது.
சீனா+ ரஷ்யா
ஏன் இது சப்போர்ட்டாக இருக்கும் என்பது குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “ஒருவேளை அந்த ரேஞ்சிற்கு போனால் உடனடியாகச் சீனா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உள்ளே புகுந்து தங்கத்தை வாங்க ஆரம்பித்துவிடும். தங்கத்தை ஓரளவுக்கு மேல் கீழே இறங்க விட மாட்டார்கள்” என்றார்.
பொதுவாக அனைத்து நாடுகளும் டாலரையே அதிகம் அந்நியச் செலாவணியாக வைத்திருக்கும். ரஷ்யாவும் அப்படியே வைத்திருந்தது. ஆனால், ரஷ்யா உக்ரைன் மோதல் வெடித்த போது ரஷ்யா வசம் இருந்த டாலர்களை முடக்குவதாக அமெரிக்கா அறிவித்தது. இதனால் ரஷ்யா அந்நியச் செலாவணி இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணாமகவே டாலருக்கு பதிலாகத் தங்கத்தை ரிசர்வாக ரஷ்யா வாங்கி குவிக்க ஆரம்பித்து.
எங்கு ரஷ்யாவைப் போல எதிர்காலத்தில் தங்கள் டாலரையும் அமெரிக்கா முடக்குமோ எனக் கருதி சீனா, துருக்கி நாடுகளும் டாலரை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைத்த போதும் தங்கம் விலை குறையவில்லை. இந்த நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்ததே தங்கம் விலை அதிகரிக்கக் காரணமாக இருந்தது.
இப்போது இந்த நாடுகள் தங்கம் வாங்குவதை ஓரளவுக்கு நிறுத்தி வைத்துள்ளன. அதேநேரம் தங்கம் விலை ஓரளவுக்கு மேல் சரிந்தால் மீண்டும் இந்த நாடுகள் உள்ளே வந்து வாங்க ஆரம்பித்துவிடும். இதன் மூலம் தங்கம் விலை ஓரளவுக்கு மேல் சரியாது என்பதே ஆனந்த் சீனிவாசனின் கருத்தாகும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்
