சென்னை: தமிழ்நாடு முழுக்க; நகர பகுதிகளில் 86 ஆயிரம் பட்டாக்களை 6 மாத காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
2 நாட்களுக்கு முன்பு, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதுகுறித்து வருவாய் துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் சொல்லும்போது, “அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.. சென்னையில் 60000 க்கும் மேற்பட்ட பட்டாக்கள் இதுவரை வழங்கப்பட்டிருக்கின்றன.. அதேபோல, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 86,368 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

இந்த அரசு விழாவில், 2,500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அப்போது வழங்கியிருந்தார்.. நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “தமிழ்நாடு முழுக்க நகர பகுதிகளில் 86 ஆயிரம் பட்டாக்களை 6 மாத காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.. இதை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
புறம்போக்கு நிலம்
சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29 ஆயிரத்து 187 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. அதேபோல, மதுரை, நெல்லை போன்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் மட்டும் 57 ஆயிரத்து 84 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது.
கிட்டத்தட்ட 63 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்துகின்ற வகையில், 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்.. இது தமிழ்நாட்டின் வரலாற்றில் நிலைத்து இருக்கப் போகின்ற ஒரு நடவடிக்கையாகும்” என்று பெருமிதத்தோடு கூறியிருந்தார். துணை முதல்வரின் இந்த அறிவிப்பானது, மக்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்துவருகிறது..
பட்டா, கிரையப்பத்திரம்
இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக 24 முதல் 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது குறித்து சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
சிறப்பு முகாம்கள் – தேதிகள்
அதில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக பிப்.24 முதல் 28 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பிப்ரவரி 24-ல் மாதவரம், ஆர்.கே. நகர், திருவிக நகர், கிண்டி, மயிலாப்பூர், தி.நகர் பகுதிகள், பிப்.25-ம் தேதி மாதவரம், பெரம்பூர், திரு.வி.க நகர்- வ.உ.சி நகர், எழும்பூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டப்பகுதிகளில் நடைபெறும்.
மேலும் பிப்ரவரி 26-ம் தேதி மாதவரம், எழும்பூர், அம்பத்தூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டப்பகுதிகள், பிப்ரவரி 27-ம் தேதி மாதவரம், ஆர்.கே.நகர், அண்ணா நகர், எழும்பூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டப்பகுதிகள், 28-ம் தேதி மாதவரம், பெரம்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், தி.நகர், சைதை திட்டப்பகுதிகளில் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது
