தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை

சென்னை: நகைக் கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. புதிய விதிகளில் மாற்றங்களை செய்யும் வரை அதை அமல்படுத்த வேண்டாம் என்றும் நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
சிறு கடன் வாங்குபவர்களின் தேவைகள் பாதகமாக பாதிக்கப்படக்கூடாது என்றும் நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. தங்கக் கடன்கள் தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டுதல்களை ஆராய்ந்தோம். ரூ.2 லட்சம் வரை கடன் பெறும் சிறு கடன் வாங்குபவர்களின் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். இப்போது இந்த விதிகளை நிறுத்தி வைப்பதே சிறந்தது. விதிகளில் மாற்றங்களை செய்த பின் ஜனவரி 1, 2026 முதல் இந்த விதிமுறைகள் செயல்படுத்தலாம்.
சரியான நேரத்தில் மற்றும் விரைவாக கடன்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக இதில் மாற்றங்களை செய்ய வேண்டும். சிறு கடன் வாங்குபவர்களை இந்த முன்மொழியப்பட்ட வழிமுறைகளிலிருந்து விலக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது
ஆர்பிஐ வரைவு விதிகள்
ஆர்பிஐ வெளியிட்டு இருக்கும் புதிய வரைவு விதியின்படி தங்க நகை மதிப்பில் 75% வரை தான் கடன் கொடுக்க வேண்டும். அதாவது பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். தெரிந்த முகங்கள், நண்பர்கள், பாரம்பரிய வாடிக்கையாளர்கள் என்ற காரணங்களுக்காக பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். ஆனால் இனி அப்படி வழங்க முடியாது.
உங்களின் நகை 1 லட்சம் ரூபாய் என்றால்.. அதில் 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கடன் வழங்க முடியும். அதேபோல் தங்கம் விலை இன்று திடீரென உயருகிறது என்றால்.. உதாரணமாக இன்று 10000 ரூபாய் உயருகிறது என்றால்.. அதை வைத்து நீங்கள் நகையை அடகு வைக்க முடியாது. கடந்த ஒரு மாத தங்க விலையை சராசரியாக கணக்கிட்டு மதிப்பிட வேண்டும். அதாவது கடந்த 1 மாதத்தில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கிறது என்ற சராசரியாக பார்த்துவிட்டு மட்டுமே கடன் கொடுக்க வேண்டும்.
நீங்கள் வெறுமனே போய் எல்லா இடத்திலும் நகை அடகு வைக்க முடியாது. நகையை அடகு வைக்க அதன் பில்லை காட்ட வேண்டும். அந்த பில்லில் கடன் கேட்பவரின் பெயர் அவரின் தந்தை பெயர் இருக்க வேண்டும். நகையின் விவரங்கள் அனைத்தும் அந்த கடன் பத்திரத்தில் இருக்க வேண்டும்.
தங்க நகை பற்றிய முழு விவரமும் கடன் ஆவணத்தில் இருக்க வேண்டும். அதேபோல் ஒரு நகை மீது புதிய கடன் வாங்க அதன் மீது முழு வட்டியும் செலுத்த வேண்டும். தங்க பார்களை அடகு வைக்க முடியாது என்றும் வாங்க முடியாது என்றும் விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
திமுக போர்க்கொடி
ஆர்பிஐ வரைவு விதிகளுக்கு எதிராக திமுக, சிபிஎம் உள்ளிட்ட ஆளும் கட்சி தரப்பினர் போர்க்கொடி தூக்கி இருந்தனர். தி.மு.க விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வரைவு நெறிமுறைகள் கடன்களை தவறான வகைப்படுத்தலுக்கு வழிசெய்வதுடன், தணிக்கை தடைகளுக்கும் காரணமாக அமைந்து அதன் காரணமாக வங்கி மற்றும் கடனாளி இருதரப்பினருக்கும் பொறுப்பு அதிகரிக்கக் கூடும் என்று முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த நிலையில்தான் நிதி அமைச்சகம் இந்த முடிவு எடுத்துள்ளது
