சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடுகளை வாங்குவது எப்படி என்பதுதான் இந்தத் தொகுப்பு..
ஏழை மற்றும் குடிசை வாழ் மக்கள் குறைந்த விலையில் வீடு வாங்க ஏதுவாக 1970-ம் ஆண்டு தமிழக அரசால் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு குடிசைப்பகுதி வாரியம் என்கிற பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றினார். அதோடு, வாரியம் மூலமாகக் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளைத் துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.
அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 29,439 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 79,094 குடியிருப்புகள் வரும் 2025 ஜூன் மாதத்துக்குள் கட்டி முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுபோக புதிதாக 9,151 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கட்டித்தரும் இந்த வீடுகளைப் பெற முன்பு குடியிருப்பு வாரிய அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பங்கள் கொடுப்பது போன்று பல்வேறு பணிகளை அலைந்து செய்ய வேண்டி இருந்தது. ஆனால், இப்போது வீடு வாங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தும் விதமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியைத் தற்போது அரசு கொண்டுவந்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணையதளத்தில் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளின் விவரங்கள், அவற்றுக்கு விண்ணப்பிக்கும் வசதி ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், 62 திட்டங்களில் உள்ள 22,049 வீடுகள் விற்பனைக்கு உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வீடுகளை மானிய விலையுடன் தமிழக அரசு விற்பனை செய்கிறது.
மானிய விலை?: இந்த அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டப்படும் விலைக்கு விற்கப்படுவதில்லை. ஏனென்றால், இந்த வீடுகளைக் கட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்குகின்றன. குறிப்பாக மத்திய அரசு ரூ.1.50 லட்சமும், மாநில அரசு ரூ.7.50 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரையும் மானியம் வழங்குகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?: தமிழக அரசின் வரையறைப்படி, நகர்ப்பகுதிகளில் அமைந்துள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள், ஆட்சேபனை அரசு புறம்போக்கு நிலங்களான நீர்நிலைப் பகுதிகள், காப்புக்காடுகள், வெள்ளசேத பகுதிகள், கடலோர பகுதிகளில், சாலையோரத்தில் வசிப்பவர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், அரசின் திட்டப் பணிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளைப் பெறலாம். எனினும், இந்தக் குடியிருப்பைப் பெற மிக முக்கியமான தகுதி குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?: இந்த வீடுகளைப் பெற விரும்பும் மக்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணையதளமான www.tnuhdb.org.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். அந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ‘வீடு வேண்டி விண்ணப்பம்’ தலைப்பில் உள்ள பிரிவைக் கிளிக் செய்து மிக எளிமையான முறையில் விண்ணப்பிக்கலாம். இதில் எந்த இடத்தில் எத்தனை வீடுகள் உள்ளது, அவற்றின் விலை எவ்வளவு என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.
விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், ரூ.3 லட்சத்துக்கான வருமானச் சான்று, ரேஷன் கார்டு, தங்களுக்கு எங்கும் வீடு இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம் ஆகியவை கட்டாயம். இவற்றை வைத்திருப்பவர்கள் விண்ணப்பித்தால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும். 90 நாட்கள் பணம் செலுத்தக் கால அவகாசமும் வழங்கப்படுகிறது. பணம் செலுத்தியவுடன் வீடுகள் ஒப்படைக்கப்பட்டாலும், 5 ஆண்டுகளுக்குப் பிறகே குடியிருப்புகளுக்கான பத்திரம் ஒப்படைக்கப்படும்.
சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு வீடு: சென்னையில் 400 சதுர அடி கொண்ட வீடு வாங்க வேண்டும் என்றால், குறைந்தது ரூ.50 லட்சம் செலவிட வேண்டி வரும். ஆனால், அதுவே நகர்ப்புற வாரியத்தின் கீழ், ஒரு ஹால், படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை வசதி கொண்ட 1 BHK குடியிருப்பின் விலை ரூ.6.73 லட்சத்துக்கு வழங்கப்படுகிறது. சென்னை மணலியில் இரண்டு குடியிருப்புகளைக் கட்டியுள்ளது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம். இவற்றில் மணலி புதுநகர் திட்டம் 2-ல் உள்ள 6 வீடுகள் தலா ரூ.10.37 லட்சம் மதிப்பிலும், மணலி புதுநகர் திட்டம் 7-ல் உள்ள 200 குடியிருப்புகள் தலா ரூ.6.73 லட்சம் மதிப்பிலும் விற்பனை செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் ரூ.6.16 லட்சம் மதிப்பில் வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, செங்கல்பட்டு தவிர திருவள்ளூர், கடலூர், வேலூர், ஈரோடு, திருப்பூர், கோபிச்செட்டிபாளையம், சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி ஆகிய 17 மாவட்டங்களில் 22,049 வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றில் 92 ஆயிரம், ரூ.1 லட்சம் என மாவட்டங்களுக்கு ஏற்ப வீடுகளுக்கு விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More
Although the full movie leaked online a few days ago, potentially impacting box office earnings,… Read More
NDTV Through the NDTV result checker, students can quickly access their scores with their roll… Read More
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More