GOVT JOBS

இளைஞர்களுக்காக 3 ஆண்டு காலம், குறுகிய கால ராணுவப்பணி வாய்ப்பு ‘டூர் ஆப் டூட்டி’

புதுடெல்லி:

உலகில் மிகப்பெரிய ராணுவங்களில் இந்திய ராணுவமும் ஒன்று. இந்திய ராணுவத்தில் சுமார் 13 லட்சம் வீரர்கள் பணியாற்றுகிறார்கள். ராணுவத்தில் சேருவதற்கு இளைஞர்களிடையே அதிக ஆர்வம் உள்ளது. அதேநேரத்தில் ராணுவத்தில் சேர விரும்பும் பல இளைஞர்கள் முழு பணிக்காலத்தையும் அங்கு செலவிட விரும்புவதில்லை.

இப்படிப்பட்ட இளைஞர்களுக்காக 3 ஆண்டு காலம், குறுகிய கால ராணுவப்பணி வாய்ப்பை வழங்க இந்திய ராணுவ அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

இந்த புதிய திட்டம் ‘டூர் ஆப் டூட்டி’ அல்லது 3 ஆண்டு குறுகிய கால சேவை என்று அழைக்கப்படுகிறது. உடல் திறன், வயது போன்ற தகுதிகளின் அடிப்படையில் இதற்கான ஆட்கள் தேர்வு நடைபெறும். இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் தளவாட பணிகளில் மட்டுமின்றி, ராணுவ அதிகாரிகளாகவும் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படி குறுகிய கால ராணுவ பணி வாய்ப்பு அளிப்பதன் மூலம் ராணுவத்திற்கு நிதி சார்ந்த பலனும் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 10 முதல் 14 ஆண்டுகாலம் பணியாற்றும் ஒரு அதிகாரிக்கு, பயிற்சி மற்றும் பிற செலவுகள் என சுமார் ரூ. 5.12 கோடியிலிருந்து ரூ. 6.83 கோடி வரை செலவு ஆகும். அதே நேரத்தில் குறுகிய கால பணியில் இது ரூ. 80 லட்சம் முதல் ரூ.85 லட்ச வரை மட்டுமே செலவாகும் என அறியப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை போல மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை போன்ற துணை ராணுவ படைகளிலிருந்தும் குறிப்பிட்ட வீரர்கள் 7 ஆண்டு கால அடிப்படையில் ராணுவத்துக்கு அனுப்பப்பட்டு, 7 ஆண்டு காலம் முடிந்ததும் மீண்டும் சொந்த பணியிடத்துக்கு அனுப்புவதற்கான திட்டமும் தயாராகி வருகிறது.

இத்திட்டங்கள் குறித்து ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த தகவல்களை ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் முதற்கட்டமாக 100 அதிகாரிகளும், 1000 வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top