Social Activity

எச்சரிக்கை: விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு..Rs. 50000 சம்பளம்..! தமிழக இளைஞர்களை குறிவைத்து நடக்கும் மோசடி!

கொரோனா பொது முடக்கத்தால் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ளோரை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் விமான நிலையங்கள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில் வேலை வாய்ப்பு என்று கூறி, கொரோனா பொது முடக்க காலம் என்பதால் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு எதுவும் இல்லாமல், ஆன்லைனில் சான்றிதழ்களை மட்டும் சரிபார்த்து விட்டு வேலை தருவதாக வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து மோசடி நடைபெறுவது தெரியவந்துள்ளது.

*Urgent job Requirements in Airport Authority of India 8th-12th,anydegree,diploma,B.E 30K-50K salary with free Accom Vacancy for both Fresher &Expr Cl: * இப்படி ஒரு SMS உங்களுக்கும் வந்திருக்கலாம்.

விமான நிலையத்தில் உடனடி வேலை, ₹ 50 ஆயிரம் வரை ஊதியம், 8ம் வகுப்பு – பி.இ முடித்தவர் வரை வேலை வாய்ப்பு என்கிற கவர்ச்சிகரமான விளம்பரம் அல்லது தகவல் வாட்ஸ் அப் குழுக்களில், நேரடியாக செல்லிற்கு SMS ஆக பகிரப்படுகிறது. இதைப்பார்த்து அதில் குறிப்பிட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டால், உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்கிற அளவிற்கு இனிக்க இனிக்க நம்பிக்கை தரும் வகையில் பெண் ஒருவர் பேசுகிறார்.

வாட்ஸ் அப் எண் மற்றும் போலி அழைப்பானைஅந்த உரையாடலின் முடிவில், உங்களது சான்றிதழ்களை தனது வாட்ஸ் எண்ணிற்கு உடனே அனுப்புங்கள். கல்வித் தகுதிக்கேற்ற வேலைக்கு தேர்வு செய்கிறோம் என்று கூறுவார். அந்த எண்ணிற்கு சான்றிதழ்களை அனுப்பியதும் HR டிபார்ட்மெண்டிலிருந்து பேசுவதாக கூறி வேறொரு நபர் தொடர்பு கொள்வார்.

சான்றிதழ்களை அனுப்பியவர்களின் தகுதிப்படி விமான நிலையத்தில் ஒரு வேலையைச் சொல்லி, ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவு, தங்குமிட வசதி உள்ளிட்டவை உள்ளது. விமான நிலையத்தில் குறுகிய கால பயிற்சிக்குப் பின், பணி நிரந்தரம் செய்யப்படும். பயிற்சி காலத்தில் கணினி அடையாள அட்டைக்கு ₹ 5 ஆயிரம் செலவாகும். இதில், பாதியை விமான நிலைய ஆணைய குழுமம் ஏற்றுக்கொள்கிறது. மீதம் உள்ள ₹ 2,500-ஐ ஒரு வங்கிக் கணக்கில் செலுத்த சொல்கிறார்கள்.

விமான நிலையத்தில் வேலை, போனில் பேசியோரின் நம்பிக்கையான பேச்சு இவற்றில் கவரப்படும் இளைஞர்கள் சொன்ன வங்கிக் கணக்கில் சொன்ன தொகையை செலுத்தி விடுகிறார்கள்.

போலியாக அனுப்பப்படும் உத்தரவு

பணம் செலுத்தப்பட்ட ஓரிரு தினத்தில் இந்திய விமான நிலைய ஆணையக குழும (AAI) லெட்டர் பேடில், அப்பாயின்மென்ட் ஆர்டர் பதிவுத் தபாலில் வீட்டிற்கு வருகிறது.

அதில், குறிப்பிட்ட ஏர்போர்ட்டில் குறிப்பிட்ட பணிக்கு தேர்வாகியுள்ளதாகவும் 28 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட தொகை (₹:10, 000 ₹ 26, 000, ₹ 50, 00 என வேலைக்கு ஏற்ப) முன்பணம் செலுத்த வேண்டும். பயிற்சி முடிந்ததும் பணம் திரும்ப வழங்கப்படும் என்று சொல்வார்கள். பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரத்தை தருவார்கள். பணம் செலுத்தியதும் பணிக்கு தயாராக இருக்கவும் அறிவுறுத்துவார்கள். பணம் செலுத்தினாலே அல்லது சுதாரித்து கேள்விகள் எழுப்பினால் நம்முடையை எண்ணை பிளாக் செய்து விட்டு, அடுத்த ஆளை குறி வைக்க தொடங்கி விடுவார்கள்.

பலமுறை தொடர்பு கொண்டும், அவர்களைத் தேடியலைந்த பிறகுதான் தெரியும் பேசிய ஆட்கள் முதல் அனுப்பிய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரை அனைத்தும் போலி என்று.

செல்போனிலேயே வேலை வாய்ப்பு என்று பணத்தையும் பறிகொடுத்த இளைஞர்கள் வெளியில் சொன்னால் வெட்கப்பட்டு உள்ளுக்குள்ளேயே புழுங்கி சாகிறார்கள்.

இது குறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் தருமராஜனிடம் கேட்டதற்கு, விமான நிலைய ஆணைய குழுமத்தில் இது போல் ஒரு போதும் வேலைக்கு ஆட்களை எடுப்பதில்லை. எங்களுடைய அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பணி நியமனங்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படும். எனவே நேரடியாக விமான நிலைய பணி நியமனம் என்று யாரிடமும் ஏமாற வேண்டாம். இது குறித்த விழிப்புணர்வை இந்திய விமான நிலைய ஆணைய குழும இணையதளத்திலும் வெளியிட்டுள்ளோம் என்கிறார்.

மேலும், விமான நிலையத்தில் மட்டுமல்ல எந்த பொதுத்துறை நிறுவனத்திலும் தனி நபர்கள், தனியார் அமைப்புகளால் பணி நியமனம் செய்யப்படுவதில்லை. இது போன்ற மோசடி அடிக்கடி நடப்பதாகவும், புகார் தர பலரும் தயங்குகிறார்கள். இந்த தயக்கமே மோசடி கும்பலுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

இது குறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கும் ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன. எனவே தொலைபேசியில் பேசி வேலை, பயிற்சிக்கு கட்டடணம், பணம் செலுத்த வேண்டும் என்றாலே விழித்துக்கொள்ள வேண்டும். ஏமாறக் கூடாது. தயங்காமல் காவல்துறை அல்லது விமான நிலைய அதிகாரிகளை அணுக வேண்டும் என்கிறார் விமானப் போக்குவரத்து குறித்த ஆராய்ச்சியாளர் உபயதுல்லா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top