
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் 45 உட்பட நாடு முழுதும் 1,256 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், சில பள்ளிகளில் மட்டுமே, 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை, ‘பால்வாடிகா’ என்ற கே.ஜி., முதல்நிலை வகுப்பில் சேர்க்கும் வசதி உள்ளது.
மற்ற பள்ளிகளில், 6 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை, முதல் வகுப்பில் சேர்க்கலாம்.
இந்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கி, வரும் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு, https://balvatika.kvs.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, குழந்தையின் விபரங்கள், சான்றிதழ்களை பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வான மாணவர்களின் முதல் பட்டியல் 25, 26ம் தேதிகளிலும், இரண்டாம் பட்டியல் அடுத்த மாதம் 2ம் தேதியும், மூன்றாம் பட்டியல் 7ம் தேதியும் வெளியாக உள்ளது.
